பரமத்திவேலூர் பேரூராட்சி கூட்டம்: செயல் அலுவலர் சண்முகம், தலைவர் லட்சுமி முரளி ஆகியோர் செய்யும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு:
பரமத்திவேலுார் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பராமரிப்புக்கென பல கோடி ரூபாய் செலவு செய்ததாக 189 காசோலைக்கு மன்ற அனுமதி வேண்டுமென கணக்கு சமர்ப்பித்தனர். மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற எந்த ஒரு தீர்மானமும் இல்லாததால் மன்ற கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பரமத்திவேலூர் பேரூராட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் லட்சுமி தலைவராகவும், கவுன்சிலர் ராஜா, துணை தலைவராகவும் உள்ளனர்.நேற்று கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.தலைவர் லட்சுமி, தலைமை வகித்தார்.துணைத்தலைவர் ராஜா,செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 24 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதில் 4 தீர்மானங்களுக்கு ஆதரவாகவும், 20 தீர்மானங்களுக்கு, 14 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குரிய கடிதத்தை செயல் அலுவலர் சண்முகம், தலைவர் லட்சுமியிடம் வழங்கினார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது 3வது தீர்மானமாக பரமத்திவேலுார் டவுன் பஞ்சாயத்தில் கடந்த 5 மாதத்திற்கு மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் மன்றத்தின் அங்கீகாரத்துக்கு என வாசிக்கப்பட்டது. இதற்கு 14 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து செலவு, கணக்கு முறையாக காண்பிக்காமல் செக் போட்டு டவுன் பஞ்சாயத்து பொது நிதியிலிருந்து பணம் எடுத்து உள்ளீர்கள் முறையாக கணக்கு காண்பியுங்கள், இதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் கிளார்க் தேவராஜ், அடுத்த தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கினார். இதனால் செயல் அலுவலருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஒரு தீர்மானம் கூட மன்ற கூட்டத்தில் வைக்கவில்லை. தெரு விளக்குகள், புதிய குடிநீர் இணைப்பு, சாலை வசதி குறித்து எதுவும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நடந்த மன்ற கூட்டம் வாக்கெடுப்பில் 13 தி.மு.க.,கவுன்சிலர், பாமக ஒரு கவுன்சிலர் என, 14 கவுன்சிலர்கள், தலைவர் லட்சுமி கொண்டு வந்த தீர்மானத்துக்கு குரல் ஒட்டெடுப்பில் எதிராக பதிவு செய்தனர்.
அ.தி.மு.க., 2 கவுன்சிலர்கள், தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் மட்டும் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தனர்.
தொடர்ந்து 12 கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இதையடுத்து தீர்மானங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டத்தை தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் நிறைவு செய்தனர்.
இது குறித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் கூறியதாவது: திமுகவின் சின்னத்தில் வெற்றி பெற்ற தலைவர் லட்சுமி முரளி இன்று அதிமுகவிற்க்கு ஆதரவாக செயல்படுகிறார்.
பல கோடி ரூபாயை டவுன் பஞ்சாயத்து பொது நிதியிலிருந்து எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களில் டவுன் பஞ்சாயத்து நிதியிலிருந்து எடுக்கப்பட்ட 189 காசோலைகள் குறித்து உரிய விளக்கம் தரவில்லை ஏற்கனவே பரமத்திவேலுாரில் அமைத்த தார் சாலை தரம் இல்லாததாக உள்ளது.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சண்முகம் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கிடப்பில் உள்ளது. தற்போது மேலும் பல்வேறு தீர்மானங்கள் கமிஷன் அடிப்படையில் நிறைவேற்ற கொண்டு வந்துள்ளனர்.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் பல கோடி மதிப்பில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.
பரமத்திவேலுார் டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், கிளார்க் தேவராஜ் ஆகியோர் காண்ட்ராக்ட் பணிகளுக்கும், ரியல் எஸ்டேட் பிளாட் அப்ரூவ்வல்களுக்கும், பல கோடி கமிஷன் பெற்று தீர்மானங்களை நிறைவேற்றுங்கள் என எங்களை வற்புறுத்துகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் செயல் அலுவலர் மற்றும் கிளார்க் மீதும் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.