முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் பங்கேற்கும் வகையில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு குழு 21 துறைகள் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினர் அதிக அளவில் பதிவு செய்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சிகள், தேசிய நாட்டு நலப்பணிகள் மற்றும் நேருயுகவேந்திரா குழுக்கள் அமைத்து போட்டிகள் குறித்த விளம்பர பதாதைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்களும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.பிரியங்கா, முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.