கடலூரில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொண்டு, இ-சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேரலாம். பயிர்க்கடன்,வேளாண் நகைக்கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர்காப்பீடு திட்டத்தில் சேரலாம்.
பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவுப் படிவம், விண்ணப்பப் படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் (அ) இ அடங்கல், ஆதார் அட்டை நகல், ஆதார் எண் இணைக்கப்பட்ட மற்றும் EKYC பூர்த்தி செய்யப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவை தேவையான ஆவணங்களாகும்.
அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்கள் ஆகிய மையங்களில் பயிர் காப்பீட்டிற்கு கட்டணம் செலுத்தலாம்.
பயிர் காப்பீடு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு சம்பா நெற்பயிருக்கு 564 ரூபாயும், பருத்திக்கு 449 ரூபாயும், உளுந்திற்கு255 ரூபாயும் செலுத்தவேண்டும். காப்பீடு செய்யகடைசி தேதி சம்பா நெல் , பருத்தி, உளுந்திற்கு 15.11.2025 ஆம் தேதி ஆகும். விவசாயிகள் கடைசி தேதி வரைகாலதாமதம் செய்யமல் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்கமையங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் , தெரிவித்துள்ளார்.