திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டி எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க புதுச்சேரி மாநில திமுக ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவாவிடம் திருநங்கைகள் கூட்டமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரி மாநில அக்னி சிறகுகள் திருநங்கை கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் திருநங்கைகள் அமைப்பின் தலைவர் ஷீத்தல் தலைமையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு வசிக்கும் 260க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் வாழ்க்கை வளம்பெறும் வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளபோல், புதுச்சேரி அரசு திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட திருநங்கைகள் குறித்த கணக்கும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்ற புதுச்சேரி மாநில திமுக ஆதரவளிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்திலும் திருநங்ககைளுக்கு நலவாரியம் அமைக்க திமுக சார்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் கட்டமாக திருநங்கைகளுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருநங்கைகளுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.