புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதன் மூலம் வரும் வருமானம் மற்றும் கோவில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோவில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது. கோவில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர். மணக்குள விநாயகர் கோவில் தங்க பொருட்கள், வெள்ளி பொருட்கள், கோவில் சிலைகள், வருவாய் உள்ளிட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.