தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், பிப்- 25. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 40 வயதான நபர் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளார்.
முதுகுத்தண்டு நரம்புகள் கடுமையாக நசுக்கப்படுவதால் ஏற்படும் ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற தீவிர பாதிப்பால் இவர் கடுமையான வலியால் நடக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சில நாட்களிலேயே இவரால் மீண்டும் நடக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது தனது பணிக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.
முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் மகராஜன் தலைமையிலான அறுவை சிகிச்சை குழுவால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த குழுவில் மயக்க மருந்து நிபுணர் மரு.அரி மாணிக்கம், எலும்பியல் ஆலோசகர் மரு.சண்முக ஹரிஹரன் ஆகியோர் அடங்குவர்.
இது குறித்து மரு.கார்த்திகேயன் மகராஜன் கூறுகையில், இந்த பகுதி மக்களுக்கு இந்த UBE சிகிச்சை முறை ஒரு மிகப்பெரிய வரமாகும். இரண்டு சிறிய துளைகள் மூலம் செய்யப்படும் இந்த நவீன சிகிச்சை சிக்கலான முதுகுத்தண்டு பிரச்சனைகளையும் எளிதாக சரிசெய்ய முடியும்.
இதனால் தசைகள் பாதிக்கப்படாது, ரத்த இழப்பும் குறைவாக இருக்கும் நோயாளி வேகமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்பலாம். இந்த அதிநவீன சிகிச்சையை இப்போது நாங்கள் இங்கு வழங்கி வருகிறோம் “அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவாக இயக்கத்திறனைப் பெறுவதும். அவர்களின் உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் மிகவும் திருப்தியளிக்கிறது. இந்த நவீன எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை முறையின் பாதுகாப்பு திறனையும் சிகிச்சை முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்று கூறினார்.
முதுகுத்தண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும், அவர்கள் விரைவாக குணமடைவதிலும் இதுபோன்ற அதிநவீன எண்டோஸ்கோப்பிக் சிகிச்சைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வசதி தற்போது டெல்டா பகுதியிலேயே கிடைப்பதால், நோயாளிகள், முதுகுத் தண்டுக்கான சிறப்பு சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய தேவை இல்லை.
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.வி. பிரவீன், எலும்பியல் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான மரு.பார்த்திபன் எலும்பியல் ஆலோசகர் மரு.பாலகுருநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.