பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டச்செயலாளர் திரு. ஆ. சண்முகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் திரு. எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் பெ. ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் திரு. எழில் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மருத்துவர் சங்கரி பிரியதர்சினி, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், தற்கொலை எண்ணங்களை தவிர்க்க வேண்டிய அவசியம், மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள், குடும்பம் மற்றும் சமூகத்தின் ஆதரவு முக்கியத்துவம் ஆகியவற்றை மாணவர்களுக்கு உணர்த்தினார்.
அதேபோல், துறை சார்ந்த அலுவலர் ஆனந்தராஜ் மற்றும் அரியலூர் காருணாலயாவின் “சுபம்” போதை மீட்பு மறுவாழ்வு மையம் சார்பில் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான நடைமுறைகள், மறுவாழ்வு வாய்ப்புகள் மற்றும் இளைஞர்களின் பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர்.
இந்த கருத்தரங்கில் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெய்கணேஷ் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி நிறைவுற்றது.