புதுச்சேரி திருக்காஞ்சியில் கங்கா ஆரத்தி பாடல் குறுந்தகடு-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டார்
வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முதல் முறையாக வருகிற ஏப்ரல் மாதம் 22-ந் தேதி மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காசியை போல் திருக்காஞ்சியிலும் கங்கா ஆரத்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி புஷ்கரணி விழா நடைபெறும் வரை வாரந்தோறும் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. இதற்காக சங்கராபரணி ஆற்றில் படித்துறைகள் அமைத்து தண்ணீர் தேக்கி வைத்துள்ளனர். கங்கா ஆரத்தி விழாவை சிறப்பிக்கும் வகையில் கங்கை நதீஸ்வரர் கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் எழுதிய பாடலுக்கு கொங்கணவர் கலைக்கூடம் இசைகலைஞர் கலைதாசன் இசை அமைத்துள்ளார். இந்த பாடலின் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு விழா கோவில் வளாகத்தில் நடந்தது. அதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட, இந்து அறநிலைத்துறை செயலர் உதயகுமார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாடலின் சிறப்புகளையும், பாடல் குறித்த முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன், செயல் அதிகாரி சதீஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருக்காஞ்சி சங்கராபரணி கங்கா ஆரத்தி பாடல் குறுந்தகட்டை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டபோது எடுத்தபடம்.