புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் தர்மபால சோழ மன்னரால் கட்டப்பட்ட கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 15-ஆம் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. விழாவில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி தேரின் உறுதி தன்மை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கொரோனா மற்றும் தேரின் ஸ்திரத்தன்மை சரியில்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டிருந்த தேரை எதிர்க்கட்சித் தலைவரின் சீரிய முயற்சியால் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தியதுடன், விநாயகர் தேருக்கு தமது சொந்த செலவில் சர்க்கரம் செய்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் புதுச்சேரி அரசு மற்றும் டேப்லட்ஸ் இந்தியா பவுண்டேஷன் இணைந்து வில்லியனூர் ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு, நேற்றுடன் 200 நாளை எட்டியது. 200 வது நாளையொட்டி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.