புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் மின் நிலையத்திலிருந்து முருங்கப்பாக்கம் வரை வரும் மின்பாதை அங்கிருந்து பிரிந்து அரியாங்குப்பம் பகுதிக்கு வருகிறது. இதனால் முருங்கப்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டால் அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் இருளில் மூழ்கும் நிலை உள்ளது. மேலும் வீராம்பட்டினம், மணவெளி, நோணாங்குப்பம் வரையிலும் மின்தடை ஏற்படுகிறது.கடந்த 20 ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வந்தது. எனவே, மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை தனி மின்பாதை அமைப்பதற்காக தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரிடம்(எ)தட்சணாமூர்த்தியிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று மின்துறை அதிகாரியுடன் ஆலோசனை செய்யப்பட்டு, ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின்பாதை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் முருங்கப்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் செல்வி, உதவி பொறியாளர் முருகசாமி, இளநிலை பொறியாளர்கள் ஞானவேலு, லூர்துராஜ், செல்வமுருகன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.