திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவருடைய மகள் சத்யஸ்ரீ. இவர், திருவண்டார் கோவிலில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று தேர்வு முடிவு வெளியான நிலையில், மாநில அளவில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சத்யஸ்ரீ முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். பாட வாரியாக மதிப்பெண்கள் வருமாறு:- தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100. சாதனை குறித்து மாணவி கூறுகையில்,”எனது பெற்றோர்கள் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்து வருகிறார்கள். குடும்ப சூழ்நிலை அறிந்து நன்கு படித்தேன். மாநில அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் நல்ல முறையில் மேற்படிப்பு படித்து கலெக்டர் ஆவதே லட்சியம். எனது வெற்றிக்கு காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புற அளவில் படித்து இந்த சாதனையை புரிந்துள்ளேன்” என்றார். மாணவியை புதுச்சேரி கல்வியமைச்சரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.