பாராளுமன்ற தேர்தலையொட்டி, புதுச்சேரியில் 28–ஆம் தேதி நடைபெறும் மாநில திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக–வை சேர்ந்த மகளிர்களுக்கு அமைப்பாளர் இரா. சிவா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றிக்கு எப்படியெல்லாம் தேர்தல் களமாடுவது குறித்து புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஒவ்வொரு அணியாக கூட்டம் நடத்தப்பட்டு தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாநில திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண நிலையத்தில் வரும் 28–ஆம் தேதி காலை 08.00 மணிக்கு நடைபெறுகிறது.
எனது தலைமையில் மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமைக் கழக மகளிர் அணிச் செயலாளர் ஹைலன்டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப. ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
ஆகவே, புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்து நடைபெறும் இக்கூட்டத்தில், புதுச்சேரி மாநில திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளில் பங்கேற்றிருக்கும் மகளிர்கள் என திமுக–வில் அங்கம் வகிக்கும் அனைத்து நிலையில் உள்ள மகளிர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.