வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்ததற்கு மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் சுமார் 75 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்த மின்னழுத்தமே நிலவி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்விளக்குகள் போதிய வெளிச்சம் இன்றியும், மின்சாதனப் பொருட்கள் சரிவர இயங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிர்வாகம் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப்பகுதியில் புதிதாக 63 கே. வி மின் திறன் கொண்ட மின் மாற்றி அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. அதனை அடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.