எஸ் செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி

சீர்காழி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்படும் பாரம்பரிய நெட்டி மாலையை பொங்கல் தொகுப்பில் சேர்த்து வழங்கிட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மேலவள்ளம் கே.கே.நகர் பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலி தொழில் செய்து வரும் இவர்களுக்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய 3 மாதங்களுக்கு வேலையில்லாததால் வருமானம் தடைபடும். இதனால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையை சார்ந்தவர்கள் மாட்டுப் பொங்கல் அன்று கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் இயற்கையான நெட்டி மாலை செய்து விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

மூன்றாவது தலைமுறையாக தற்போதும் இந்த நெட்டி மாலை தயாரிப்பு தொழிலை கைவிடாமல் செய்துவரும் இப்பகுதி மக்கள் நெட்டி மாலை தயாரிப்புக்கு என மூன்று மாதங்களுக்கு முன்பே ஆந்திரா, பாண்டிச்சேரி, பின்னத்தூர் ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி நெட்டி செடிகள் மற்றும் தாழை நாற்களை சேகரித்து வந்து பதப்படுத்தி, அளவாக நறுக்கி, சாயம் நனைத்து, வண்ண வண்ண இயற்கையான மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு இல்லாத நெட்டி மாலைகளை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

இந்த ஆண்டு நெட்டி மற்றும் தாழை நார்களை சேகரித்த மேலவள்ளம் மக்கள் விலை உயர்ந்த பட்ட சாயங்களை வாங்கி வந்து மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மினுமினுக்கும் பிளாஸ்டிக் மாலைகளின் வரவால் நெட்டி மாலைகளின் வியாபாரம் மந்தமடைந்துள்ளது.

கூலி தொழிலாளர்களான இவர்கள் மாலை தயாரிக்க கடன் வாங்கி தொழிலை செய்யும் நிலையில் மட்டுமே உள்ளனர். எனவே நெட்டி மாலை தயாரிக்கும் தங்களுக்கு தமிழக அரசு குறைந்த வட்டியிலான கடன் உதவி வழங்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் மாலைகளை கால்நடைகளுக்கு அணிவிக்காமல் இயற்கையாக தாங்கள் தயாரிக்கும் நெட்டி மாலையை வாங்கி உபயோகப்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

பொங்கல் தொகுப்பில் நியாய விலை கடைகள் மூலமாக கால்நடை வளர்ப்போருக்கு நெட்டி மாலை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என நெட்டி மாலை தயாரிக்கும் மேலவள்ளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *