இரா. ஏசுராஜ் தஞ்சை செய்தியாளர்
.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பள்ளி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அறக்கட்டளை மற்றும் விருது வழங்கும் விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்ட மேலாளர் ப.மருதநாயகம் பேசுகையில் தொல்காப்பியத்திற்கு இணையான நூல் வேறு எந்த மொழியிலும் இல்லை என்றும்”தொல்காப்பியம் இலக்கண நூலாக முழுமையும் தனித்துவமும் கொண்டது என்பதை மேல் மொழியியலாளர்கள் உணர வேண்டும். வேறு எந்தச் செம்மொழியிலோ இன்றைய மொழியிலோ இது போன்ற மொழிநூல் இல்லை. எல்லா மொழிகளுக்கும் ஏற்ற, எல்லாக் கால இலக்கியத்திற்கும் ஏற்ற இலக்கணம். ஒரு மொழி நூலில் எதிர்பார்க்கப்படும் அனைத்து கூறுகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அப்பெருநூலில் புதைந்து கிடப்பது மற்றொரு சிறப்பான அம்சமாகும்.
ஆங்கில இலக்கண வரலாற்றைப் பொறுத்த வரையில் அது குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அதன் குறைபாடுகளை வெளிப்படுத்தும். இந்த மொழியில் மரபிலக்கணம் என்பது 18, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கையாளப்பட்ட இலக்கணத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் இலத்தீன் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார் மருதநாயகம்.
நிகழ்ச்சிக்கு வி.திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் வரவேற்றுப் பேசினார். இந்திய மொழிகள் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பள்ளியின் இணைப் பேராசிரியர் இரா.வெங்கடேசன் இணைப்பை வழங்கினார்.
முன்னதாக, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பள்ளி பேராசிரியை கவிதா வரவேற்றார். இறுதியாக உதவிப் பேராசிரியர் சி.சாவித்திரி நன்றி கூறினார்.