கோயம்புத்தூர்,
எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள Round Table India அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து சென்று மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து மகிழ்வித்தனர்.
பிளைட் ஆப் பேண்டஸி (‘Flight of Fantasy’) எனும் திட்டத்தின் மூலம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஏழை குழந்தைகளை விமானப் பயணத்திற்கு அழைத்து சென்று, அவர்களும் வாழ்க்கையில் உயரப் பறக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி வருகிறது.
இம்முறை கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் ஜெம் மருத்துவமனையுடன் இணைந்து 30 குழந்தைகளுக்கு இந்த விமானப் பயண அனுபவத்தை வழங்கின.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, குழந்தைகள் பராமரிப்பாளர்கள், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கோவைக்கு வந்து, ஜீடி கார் அருங்காட்சியகம், வனக் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மண்டல அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்த திட்டத்தை, கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133-இன் தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர் வெங்கட் விஸ்வாஸ், செயலாளர் அக்ஷய் மற்றும் பொருளாளர் வருண் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும், கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101-இலிருந்து தலைவர் ஹர்ஷவர்தன், துணைத் தலைவர் பிரணவ் செந்தூர், செயலாளர் கரண் ரஹேஜா மற்றும் பொருளாளர் தருண் குப்தா ஆகியோரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினர்.
இந்த முயற்சி வெறும் குழந்தைகளை விமானத்தில் அழைத்து செல்வதற்காக மட்டும் அல்ல; அவர்கள் பெரிய கனவுகளை காணவும், வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை அடையவும் ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த சிறுவர்கள், சிறுமியர்களின் கண்களில் கண்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் எங்களுக்கு மனநிறைவை அளித்தது, என்றும் அவர்கள் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும் ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் முன்னெடுக்கப்படும் இந்த ‘Flight of Fantasy’ திட்டம் உறுப்பினர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் ஏழை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை வழங்கும் வாய்ப்பாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.
மேலும், இந்த முயற்சிக்கு ஜெம் மருத்துவமனை தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவ சேவையுடன் சமூக நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் ஜெம் மருத்துவமனை, இத்தகைய சமூக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133-இன் தலைவர் ஸ்ரீராம், அனைத்து குழந்தைகளும் இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வேண்டும். வாழ்க்கையில் எல்லாமே சாத்தியம் என்பதை அவர்கள் உணர இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நல்ல வாய்ப்பாக அமைகின்றன, என்று கூறினார்.