தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு..
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி,பழங்கலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு சார்பில் இலத்தூர் ஒன்றியம் பரமேஸ்வரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழில் அழகாகவும் பிழையின்றியும் எழுதும் போட்டி கடந்த 4-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இதில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் பிழையின்றி அழகாக எழுதிய 14 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் எஸ். சிவானந்தவல்லி, உதவி தலைமையாசிரியர் வி.சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள் ஜி.தேவராஜ், சி.மோகனா, எஸ் இராஜலட்சுமி, பி. அபிதா, கு.தினேஷ்குமார் வ.டில்லி கணேஷ், எ. கீதா, சு.பா.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழன்னை புலனக்குழு நிறுவுநரும் அகவை முதிர்ந்த தமிழறிஞருமான அகநம்பி தி.பாலசுப்பிரமணியன் மற்றும்,புலனக்குழு ஆலோசகரும் ஓய்வு பெற்ற கிராம நிருவாக அலுவலருமான கே.ஆர்.அரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் 14 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர். மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது