புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திருநங்கைகள் சிலர் பணம் பறிப்பதாக போலீசார் குற்றம் சாட்டி அறிவுரை வழங்கினர்.
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை குறி வைத்து திருநங்கைகள் சிலர் பணம் பறிப்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்தநிலையில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் வழிகாட்டுதல்படி ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் திருநங்கைகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது, திருநங்கைகள் தொழில் தொடங்கவும், படிப்பதற்கும் உதவிகள் தேவைப்பட்டால் போலீசாரிடம் தெரிவிக்கலாம். மேலும் இரவு நேரங்களில் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்தனர்.