நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சௌரிராஜ பெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி, வருகிற 3-ஆம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 4-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் மணிகண்டன், செயல் அலுவலர் புவியரசு, கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.