நாகப்பட்டினம்,மே.31-
திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி மேல பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 ஆண்டு காலமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீரை நிரப்பாமல் நேரடியாக மோட்டாரில் இருந்து குழாய்களுக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதனால் மின்சாரம் தடைபடும் நேரங்களில் மோட்டார் நின்று தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் மின்தடை காலங்களில் முழுவதுமாக தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.