நாகப்பட்டினம், மே 31:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆந்தகுடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தலைமையேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ், மத்திய செயலாளர் அசோக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்கன்னாபூர், கீழகன்னாபூர், சிகார், வலிவலம், ஆதமங்கலம், மானலூர், ஆந்தகுடி மற்றும் கூரத்தார்குடி உள்ளிட்ட 8 ஊராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் அஞ்சலையம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் கொள்கை உறுதிமொழி பாடல் ஒலிபரப்பப்பட்டு, புதிய உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து பேசிய மாவட்ட செயலாளர் சுகுமார், “முதலமைச்சர் விஜய் வழங்கும் வழிகாட்டுதலின்படி கட்சியை நேர்மையுடனும் உண்மையுடனும் முன்னெடுத்து செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று, குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.இந்த நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் கிருஷ்னராஜ், விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் நாகேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், ஊடகப் பிரிவு அணி ரோஹித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.