காங்கயம், கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் நிகழ்ச்சி காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கவி தலைமை வகித்தார்.
இதில் கவிஞர் கவிதா பாரதி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் குறித்தும், அவருடைய தமிழ் மொழிப் பற்று குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், காங்கயம் நிர்வாகிகள் அகிலன், ஸ்டாலின், சட்டக் கல்லூரி மாணவி ஜென்னி, பெரியாரின் பெண்கள் அமைப்பு நிர்வாகி கனிமொழி ஆகியோர் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் இயற்றிய கவிதைகளின் மாண்பு குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் கவிஞரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் காங்கயம் மற்றும் சென்னிமலை நிர்வாகிகளான கார்முகில், சௌந்தரராசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.