புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவா புத்தாண்டு வாழ்த்து தொவித்துள்ளார்.
2022–ஆம் ஆண்டு முடிவுற்று 2023–ஆம் ஆண்டு பிறக்கிறது. அப்படி பிறக்கும் புத்தாண்டு, புதிய சிந்தனையையும், புத்துணர்வையும் ஏற்படுத்தி, புதுவாழ்வு மலரட்டும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த கால இருள் நீங்கி, கதிரொளி பரவி, மக்களின் கவலைகள் துடைத்து, காக்கும் கரங்களைக் கொண்டு தமிழகத்தில் நல்லாட்சி புரிந்திடும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகன் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதியார் வழியில், புதுச்சேரி வாழ் மக்களுக்கு விடியல் தரும் ஆண்டாக அமையும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன்.
கடந்த ஆண்டில் ஒன்றிய, மாநில அரசுகளால் ஏற்பட்ட கசப்பு அதிகம். இந்தித் திணிப்பு, தமிழ்ப் புறக்கணிப்பு, நீட் நெருக்கடிகள், இட ஒதுக்கீட்டில் முரண்பாடு, அரசுத் துறைகள் தனியார்மயம் என்று ஒன்றிய அரசின் தவறான நிலைபாடுகள் ஒரு பக்கம். மாநிலத்திலோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு அதிகாரம் இல்லை. எந்த தரப்பிற்கும் நன்மை செய்ய முடியாத, மனநிம்மதி இல்லாத ஓர் ஆட்சியாக உள்ளது. 2022–ஆம் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசுகளால் மக்கள் அனுபவித்த துன்ப, துயரங்கள் தொலைந்து, ஆண்டு மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் என நம்புகிறோம்.
இந்தியச் சமூகம் காலம்காலமாக காப்பாற்றி வந்திருக்கும் சமத்துவம், சதோரத்துவம், சமூக நீதி, மதசார்பின்மை, மனித நேயம் ஆகிய பண்புகளை எந்நாளும் காக்க இந்நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். சாதி, மதங்களை கடந்து சமதர்ம சமத்துவம் அமைவதுடன், கொரோனா இல்லாத ஆண்டாக வரும் புத்தாண்டு அமையட்டும்.
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.