நாகப்பட்டினம்,ஜூலை.4 –
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் தமிழக விவசாயின் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் காளிதாஸ், மாவட்ட துணை செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் நீலகண்டன் பாஸ்கர் எழில்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். குத்தாலம் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் குத்தாலம் பகுதியில் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது அப்பகுதியை சுற்றியுள்ள 188 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் குத்தாலம், புலவநல்லூர், மண்டகமேடு, அய்யனார் கோவில் தெரு, மத்தியக்குடி, வடக்குத்தாலம் பகுதிகளை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த 446 குடும்பங்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பிராவடையான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி தினேஷ் நன்றி கூறினார்.