நாகப்பட்டினம்,ஜூலை.4 –
நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். இதில் ஆண்டுக்கு 150 முதல் 200 மாணவர்கள் வரை படித்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக கல்லூரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சுமார் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் தங்களால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நலன் கருதி தொடர்ந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
ஆசிரியர்களின் நலன் கருதி கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 4 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி வாசலில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.