அரியலூர், ஜூலை 08

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சாலை போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இடையார் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு தினந்தோறும் ஏராளமான மது அருந்துவோர் வருவதால், சுற்றுவட்டார கிராமங்களான ஏந்தல், இடையார், கல்லங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக மது அருந்திவிட்டு சாலைகளில் அட்டகாசம் செய்வது, பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையூறு விளைவிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, உடனடியாக அந்தக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சாலை போக்குவரத்தும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் வந்து கடையை அகற்றுவது குறித்து உறுதியான அறிவிப்பை வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன், துணை மேலாளர் தியாகராஜன் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், இரண்டு மாதங்களுக்குள் இடையார் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக இடையார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் சில நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *