கரூர்: பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் உள்ளிட்ட 13 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. கட்சி வழக்கறிஞர் பா. யுவராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நீதிமன்றத்தில் பாமக கரூர் மாவட்ட செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன், மாவட்ட தலைவர் தமிழ்மணி, நகர செயலாளர் ராக்கி முருகேசன், இளைஞர் அணி நிர்வாகி முத்துசாமி, முத்து, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், கடவூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கா. ராஜா மற்றும் வரதராஜன், மாவட்ட துணை தலைவர் நல்லதம்பி, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் தங்கவேலு, கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வே. விஸ்வநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சி. முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டனர்.
பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வருகையால் கரூர் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.