கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PSGIMSR), அதிநவீன கணக்கீட்டு அறிவியல் ஆய்வகம் (Computational Lab) கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் ‘சோபாஸ்’ (SOPHAS) அமைப்பின் நிறுவனர் டாக்டர் ராமலிங்கம் சங்கரனின் நினைவாக, “டாக்டர் ராமலிங்கம் சங்கரன் கணக்கீட்டு அறிவியல் ஆய்வகம்” என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி. மருத்துவ நிறுவனம், ‘சோபாஸ்’ (SOPHAS) மற்றும் அமெரிக்காவின் ‘பியூமாஸ் ஏஐ’ (Pumas-AI) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அதிநவீன ஆய்வகத்தை உருவாக்கியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் புதிய மருந்துகளைக் கண்டறிதல், மருத்துவத் தரவுகளை ஆய்வு செய்தல் மற்றும் நோய்களை முன்கூட்டியே கணிக்கும் உயர்தர கணினி உள்கட்டமைப்புகளுடன் இந்த ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க விழாவில் பி.எஸ்.ஜி. நிர்வாகப் பொது மேலாளர் வி.ஜெகநாதன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறை இயக்குநர் டாக்டர் சுதா ராமலிங்கம், சோபாஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் சுருளிவேல் ராஜன், பியூமாஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் விஜய் இவதூரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் இருந்தே உலகத்தரம் வாய்ந்த புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து உருவாக்குவதையும், கோவையை தென்னிந்தியாவின் முதன்மை மருத்துவத் தரவு பகுப்பாய்வு மையமாக மாற்றுவதையும் இலக்காகக் கொண்டு இந்த ஆய்வகம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக இதன் கூட்டு நிறுவனங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன. இந்த வசதி மூலம் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நேரடித் திட்டங்கள் மற்றும் உலகளாவிய வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.