உத்தமபாளையம், ஜூலை 17:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி, பள்ளி மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியபோது, மாணவிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வியுடன் உடற்கல்வியும், விளையாட்டுத் திறனும் இன்றியமையாதவை என்றும், விளையாட்டு ஒழுக்கம், தன்னம்பிக்கை, குழு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்க்கும் என்றும் கூறி மாணவிகளை ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் முருகன், குபேந்திரன் மற்றும் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
மேலும், மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு மற்றும் உடற்பயிற்சி சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இந்த விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.