புதுச்சேரி, ஜூலை 17:
மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் சங்கீத் நாடக அகாடமி சார்பில், யுவ புரஸ்கார் தேசிய விருது பெற்ற கே. வீரம்மாள் இயக்கத்தில், கலைமாமணி எம். எஸ். ராஜா எழுதிய கதை மற்றும் வசனத்தில் உருவான ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ நாடகம், புதுவைத் தமிழ்ச் சங்க அரங்கில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும், விடுதலைப் போராட்டப் பங்களிப்பையும் மையமாகக் கொண்டு அரங்கேறிய இந்நாடகம், பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
நாடக நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், மாண்புமிகு அமைச்சர் சப்தகிரி, வி. பி. சிவக்கொழுந்து, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து, செயலாளர் சீனு. மோகன்தாஸ், கலை பண்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் வி. கலியபெருமாள், கண்காணிப்பாளர் ஆர். அருள்ராஜ், கலைமாமணி சீனு. வேணுகோபால், எம். கண்ணன், சங்கீத் நாடக அகாடமி உறுப்பினர் கலைமாமணி டாக்டர் வி. பாலகுருநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெயரன் கலைமாமணி கோ. பாரதி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களைப் பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
கலை ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, புதுச்சேரியின் கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்ததுடன், வரலாற்று நாடகங்களுக்கு பொதுமக்களிடையே நிலவும் வரவேற்பையும் வெளிப்படுத்தியது.