பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் பேரூர் தமிழ் கல்லூரி இணைந்து, பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி, பேரூர் தமிழ் மடத்தின் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உணர்வினை விதைத்தனர். இந்த இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை மையப்படுத்தி, பிரபல பின்னணி பாடல்கள் வைத்து தயாரிக்கப்பட்ட “மனிதா… மனிதா…”, “உறுதி…” என்ற இரண்டு விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.
இந்த இசை தட்டுகளை கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழ் பேராசிரியர் முனைவர். திலிப் குமார் தலைமையிலான “மாற்றுக் களம்” நாடகக் குழுவினர் சார்பாக “எங்க கதை” எனும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகத்தினை அரங்கேற்றினர். சிறப்பாக நாடகத்தை அரங்கேற்றிய குழுவினரை தமிழ் கல்லூரி சார்பாக கௌரவித்தனர். தொடர்ந்து போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பல்சமய நல்லுரவு இயக்கத்தினர் மற்றும் தமிழ் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட பேரணியை பேரூரில் நடத்தினார்கள்.
பின்னர் பத்திரிகையாளகளை சந்தித்த முகமது ரஃபி, போதையில்லா சமூகத்தை படைக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தாங்கள் நடத்தி வருவதாக தெரிவித்தார். சமூகத்தில் போதை பொருள் பழக்கத்தால் பல்வேறு தீங்கு செயல்கள் நடக்கின்றன எனவும், அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு கல்லூரிகள், பொது இடங்கள் என பலதரப்பட்ட இடங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம் என தெரிவித்தார். போதைப் பொருள் இல்லா சமூகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை படைக்க வேண்டும் என தங்கள் விரும்புவதாகவும், அதற்கு அனைவரும் ஒத்துழைத்து வர வேண்டும் எனவும் முகமது ரஃபி தெரிவித்தார்.