கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் இன்று கோவை சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் முதன்மை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) 2024-2025 கவுரவ செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு, சின்னதாடகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏ. சுமதி, ரோட்டரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள், மற்றும் கோவை ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் கோஷல் ராம், கவுரவ செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன், நிதிச் செயலாளர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பொதுமக்களின் நலன் கருதி இம்முகாமில் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளும், பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன. சர்க்கரை பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, மற்றும் கொழுப்பு சத்து கண்டறிதல்.
கால் பாதம் பாதுகாப்பு பற்றிய ஆலோசனை, உடற்பயிற்சி முறைகள், உணவியல் ஆலோசனை மற்றும் பல்துறை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் பிரத்யேக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமிற்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மூன்று மாத சர்க்கரை அளவு, கொழுப்பு சத்து, மற்றும் எஸ்.யுஏ போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டது.
முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் நோயாளிகளுக்கு கோவை பொன்னம்மாள் துரைசாமி மருத்துவமனையில இலவச கண்புரை சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும், தேவைப்படுவோருக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ நிபுணர்கள் பொதுநலம் மற்றும் சர்க்கரை நோய் டாக்டர். டி.பரமேஸ்வரன்,தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திக் பிரபு,கண் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியம்,குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.துரைக்கண்ணன்,மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.ராஜேஷ் பாபு,இருதய மருத்துவ நிபுணர் டாக்டர்
முத்தையா சுப்பிரமணியம்,எலும்பு மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
ஸ்ரீ ராமலிங்கம்,பல் மருத்துவ நிபுணர் டாக்டர் எம். செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு சிகிச்சைகளை அளித்தனர்.
ஸ்ரீ ஐஸ்வரீயா பவுண்டேஷன் மற்றும் பானுப்ரியா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் இம்முகாமிற்குத் தேவையான உதவிகளை வழங்கியது.இலவச மருத்துவ முகாமில் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.