கடலூர், ஜூலை 28: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட வடலூர் பேருந்து நிலையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வலியுறுத்தி, சிலை அமைப்பு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அன்பு திராவிடன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிலை அமைப்பு போராட்டக் குழு நிர்வாகிகள் புஷ்ப சௌரிராஜன் மற்றும் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாநகர மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன், விடுதலை தமிழ்புலிக்கட்சி நிறுவனர் குழந்தை ப. அரசன், தோழர் குளம் அமைப்பின் நிறுவனர் சண்முகம், அனைத்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கொளஞ்சி, விடுதலை தமிழ்புலிக்கட்சி நிர்வாகி தங்க முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளை விரைவாக மீண்டும் நிறுவ வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.