அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!
.
அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்கள் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் முகமது ஜுபேர் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பயணத்தை மேற்கொணடு அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களை பார்வையிட்டு பேசுகையில்,மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான இதுவும் ஒரு தொடர்ச்சியான மலைகள்தான். அழகர்மலைத் தொடர்ச்சி. அழகர்கோயில் பெருமாள் ஆலயத்திலிருந்து மேலூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் கிடாரிப் பட்டி. இந்த ஊருக்கு நுழைவதற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு முன்னால் மதுரை ஜெயின் ஹெரிடேஜ் சென்டர் சார்பில் புனே ஜெயின் சங்கம் திகம்பர் சமண சின்னம் அழகர் மலை பகவான் ஆதிநாதர் கற்ப்படுகைகள் என தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் மஞ்சள் நிற பலகையில் கருப்பு நிற மையில் எழுதப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு கிமீ தூரம் திறந்தவெளி வயலில் நடந்து சென்றால் மலை குன்று அடிவாரம் வரும். அதிலிருந்து மலைக்குன்றினை ஏறி சமணப்படுக்கை குகையினை அடையலாம். அந்த குன்றில்தான் 12 தமிழிக் கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் ஜெயின சிற்பம் ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஏராளமான செஞ்சாந்து ஓவியங்கள் உள்ளன.
கையில் கல் ஆயுதத்தை வைத்து சுழற்றுவது, பறவை முகம் கொண்ட மனித ஓவியம்,ஓரிரு இடங்களில் சில ஓவியங்கள் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு காலத்தால் அழிந்து போன தடங்கள் உள்ளன. இவை இடைக் கற்கால ஓவியங்களாக இருக்கலாம். இங்கே இருக்கும் ஓவியங்களில் மிகவும் சிறப்பான ஓவியம் என்றால் அது ஒரு மனிதனை குனிய வைத்து ஒரு பெரிய வாளால் கழுத்தை வெட்டி பலியிடுவது போல் இருக்கும் ஒரு ஓவியம்தான். வாள் வந்து விட்டதால் இரும்புக்காலப் பண்பாடு என்று உறுதியாக சொல்லலாம். இது தவிர ஏணி, நங்கூரம், முக்கொம்பு போன்ற சில குறியீடுகளும் செஞ்சாந்து நிறத்தில் உள்ளன. ஓவியங்கள் தவிர, தமிழிக் கல்வெட்டுக்கள் உள்ளன.
அனைத்துக் கல்வெட்டுக்களும் குகையின் மேல் மட்டத்தில் உயரத்தில் உள்ளன. கிட்டத்தட்ட சுமார் 40 மீட்டர் நீளமான குகை. குகை விளிம்பில் ஒட்டுமொத்த நீள வசத்தில் இரண்டு வரிசைகளில் அந்த 12 கல்வெட்டுக்களும் உள்ளன.
கல்வெட்டுக்களில் பொற்கொல்லன், உப்பு வணிகன், கொழு வணிகன் ( கலப்பையின் கூர் பகுதியே கொழு ), அறுவை (துணி) வணிகன், பாணித (சர்க்கரைப் பாகு) வணிகன் போன்ற சொற்கள் நேரிடையாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் வணிகர்கள் இங்குள்ள துறவிகளை எவ்வளவு தூரம் ஆதரித்துள்ளனர் என்பதை அறியலாம். மதுரை மாநகரை மதிரை, மத்திரை என்று குறிக்கும் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கைகளையும், நீர்த்தேக்கத்தையும் உருவாக்க ஆன செலவின் மதிப்பாக இருக்கலாம் என்கிறது நமது தொல்லியல் துறை.“ஆதன்” என்னும் சொல் சங்ககாலத்தில் மிகவும் பொதுவான பெயராகவோ அல்லது ஒரு பெரிய தலைவனைக் குறிக்கும் சொல்லாகவோ இருந்துள்ளது.
அதில் நெடில் நீங்கி குறிலாக “ அதன்” என்னும் பெயர்ச் சொல்லும் “அதன் அதன்” என்னும் பெயர்ச் சொல்லும் இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில், கவுந்தி அடிகளுடன் மதுரைக்கு வரும் கண்ணகியும், கோவலனும் அழகர் மலையில் உள்ள குகையில் சில ஆசீவகத் துறவிகளைச் சந்தித்ததாகவும், அவர்கள் முக்காலத்தையும் உணர்ந்த “கணியர்களாக” இருந்ததாகவும், அதில் ஒருவர் இவர்களைப் பார்த்து சில வினாடிகள் கண் மூடி இருந்து விட்டு பின்னர் இவர்களை சைகையால் போகச் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது. அப்போது அந்தத் துறவியின் கண்கள் கலங்கி இருந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். அதாவது, கோவலனுக்கு நடக்கப் போவது அந்தத் துறவிக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது.
அதை நிரூபிக்கும் வகையில், இங்குள்ள ஒரு கல்வெட்டில் “கணிநாகன், கணி நதன்” என்ற இரண்டு (ஆசீவகத் ) துறவிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆசீவகத் துறவிகளுக்கே “கணி” “ கணியர்” என்ற அடைப் பெயர்கள் உண்டு (உ-ம்: கணியன் பூங்குன்றனார்).இங்குள்ள தமிழிக் கல்வெட்டுக்களின் காலத்தை கி.மு.முதலாம் நூற்றாண்டு என்று நமது அரசாங்கம் உத்தேசமாக வரையறுத்துள்ளது. நூறு அல்லது இரு நூறு ஆண்டுகள் இன்னும் பழைமையாக் கூட இருக்கலாம்.
இதே இடத்தில் கி.பி.9 அல்லது 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் ஜெயின சிற்பம் ஒன்றும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளன. மற்ற இடங்கள் போலவே இங்கும் கி.பி. 9 அல்லது 10ம் நூற்றாண்டில் அச்சணந்தி முனிவர் ஆசீவகக் குகைகளைப் பின்தொடர்ந்திருப்பதை உணர முடிகிறது.
மற்ற இடங்களைப் போலவே, இங்கும் வானவியல் ஆராய்ச்சி செய்ய வசதியான “நிலாப்பாறை” உள்ளது. இரவில் இங்கு மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தால், வானத்தின் 360 டிகிரி கோணத்தையும் முழுமையாக பார்க்க முடிகிறது.
ஒரு கல்வெட்டில் “ தியன் சந்தன்” என்று வருகிறது. இதில் வரும் “தியன்” என்னும் சொல் “தீயர்” என்ற ஆதிகுடியைச் சேர்ந்தவரைக் குறிப்பதாக இருக்கலாம்.
இன்னொரு கல்வெட்டு “ சபமிதா இன பமித்தி” என்று வருகிறது. இதில் வரும் “பமித்தி” க்கு சமணப் பெண்துறவி என்று பொருள் என்கிறது இந்தியத் தொல்லியல் துறை. அதேபோல் “சபமிதா” என்பது “சர்ப்பமித்ரா” என்ற சமஸ்கிருதச் சொல்லே என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் மறுஆய்வுக்குட்பட்டது. தமிழகத்தில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பிராகிருதத்தின் தாக்கம் இருந்தாலும் கூட, எங்குமே சமஸ்கிருதத்தின் தாக்கம் இல்லை. எனவே, “சர்ப்பமித்ரா” என்ற சமஸ்கிருதப் பெயர் சில “ஆய்வாளர்களால்” திணிக்கப்பட்டுள்ளது எனலாம்.
குகையின் உள்ளே ஒரு சுனை உள்ளதாக அரசு ஆவணம் சொல்கிறது. ஆனால், அது மழை நீர்த் தேக்கம் போல்தான் தெரிகிறது.இந்தக் குன்றின் மேலே செல்வது ஒன்றும் கடினம் இல்லை என்றாலும் கூட, ஒரே ஒரு இடத்தில் மட்டும் இரண்டு குன்றுகளை இணைக்க நமது அரசாங்கம் ஒரு இரும்பு ஏணிப்படியை போட்டு வைத்திருக்கிறது. அதில் கைப்பிடி இல்லாதலால், கொஞ்சம் ஜாக்கிரதையாய் ஏறி இறங்க வேண்டும்.மற்ற சில இடங்களில் அழகான படிகளும் உள்ளன என்றனர்.