மத்திய பிரதேச மாநிலம் நர்மதா நதியில் படகு கவிழ்ந்து ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, ஒரு தாய் தனது 4 வயது குழந்தையைத் தனது மார்போடு இறுகக் கட்டிப்பிடித்தபடி சடலமாக மீட்கப்பட்ட காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது. தனது மரணத் தருவாயிலும் தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடிய அந்தத் தாய், இயலாத சூழலில் குழந்தையைத் தனது மார்பின் மீது வைத்து அணைத்தபடி உயிர் துறந்துள்ளார்.
இந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வை மையமாக வைத்து, கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி ராஜா (UMT Raja), குழந்தைகள் உறங்கும் தொட்டிலில் அந்தத் தாயும் குழந்தையும் ஒன்றாக இருப்பது போன்ற தத்ரூபமான ஓவியத்தை வரைந்துள்ளார்.
அந்த ஓவியத்தில் “தாலாட்டு மாறிப்போனதே” என்ற வரிகளை எழுதி, அவர்களுக்குத் தனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். அந்தத் தாயின் தியாகத்தையும் பாசத்தையும் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் தற்போது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது