திருவாரூர், பிப்.13- தேசிய ஊரக வேலை திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாகக் கூறி அதனைக் கண்டித்து
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார், வளரும் தமிழக கட்சி இளைஞரணி செயலாளர் பாவா=தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டப் பொருளாளர் கனகராஜ், அதிமுக நகர செயலாளர்கள் திருவாரூர் ஆர்.டி.மூர்த்தி, கூத்தாநல்லூர் ராஜசேகர், ஒன்றியச் செயலாளர்கள் பி.கே.வி.மணிகண்டன், ஜி.சி.செந்தில்வேல் மாவட்டப் பொருளாளர் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.சின்னராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாவட்டம் முழுவதும் பத்து இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏராளமான அதிமுக, பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.
திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கூறியதாவது, ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளையும், கூடுதலான நிதி உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கருத்தாகும்.
மக்களுக்கு போகும் பணத்தை தடுக்கும் எண்ணம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு கிடையாது. முதலமைச்சர் தவறாக சொல்கிறார்.
பிப்ரவரி மார்ச், ஏப்ரல், ஆகிய மூன்று மாதங்களுக்கும் தலா ரூ 1000 வீதம் 3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகையாக 2000 ரூபாய் வழங்குவதாக முதல்வர் கூறியுள்ளார். இவரது ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மே மாதம் வந்தது. கோடை காலமும் இருந்தது. இதற்கெல்லாம் ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை? மாறாக, அரசு பணத்தை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்பது சரியானது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார்.