நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,
இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொண்டனர்.
நிகழ்வில், தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்குபெறுவோம், வாக்களிப்பதில் உறுதி கொள்ளுங்கள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வை எடுத்துரைத்து,
ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளைப் பேணிக் காப்போம் என்றும், சுதந்திரமான, நேர்மையான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி அல்லது எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஆட்படாமலும், நேர்மையுடன் வாக்களிப்போம் என்றும் உறுதியளிக்கிறோம் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், மணப்பாறை சாரணர் இயக்க ஆணையர் இளம்வழுதி, சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆர்வலர் அரிஸ்டோ வசந்தகுமார் உட்பட பலர் உறுதிமொழி ஏற்றனர்.