கோவை மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற சதுரங்கப் போட்டி, பொள்ளாச்சி கல்வி மாவட்டம் மற்றும் மதுக்கரை குறுமையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்காக கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக துவங்கியது.
இந்தப் போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு வயது மற்றும் பிரிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது சதுரங்கத் திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் விதிமுறைகளின்படி கலைவாணி பள்ளி சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
போட்டியை கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்கள் சாதனை படைப்பது அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பள்ளி அளவிலேயே மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்களை உருவாக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
துவக்க விழாவில் கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நித்யா ராஜ்குமார், பள்ளி முதல்வர் மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர்கள் இம்மானுவேல், நாகமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பள்ளியின் தாளாளர் நித்யா ராஜ் குமார் மற்றும் முதல்வர் மீனாட்சி ஆகியோர் பேசுகையில்,கல்வியோடு விளையாட்டு திறன்களை எங்களது பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவித்து வருவதாகவும்,கபடி மற்றும் கால்பந்து போன்ற போட்டிகளில் குறிப்பட்ட சாதனைகளை கலைவாணி பள்ளி மாணவர்கள் செய்து வருவதாக தெரிவித்தனர்..
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த கட்ட மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.