100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு-24 மணி நேரம் கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த கோவை இளைஞர்கள்
100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில், கோவையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் 24 மணி நேரம் தொடர்ந்து கைகளை பயன்படுத்தாமல், சைக்கிள் ஓட்டி வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அப்துல் வஹாப், மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையாளர் சண்முகம், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மண்டல சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், தியகராஜன் மற்றும் பாலமுரளி ஆகிய இளைஞர்கள், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்களிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்த சவாலான முயற்சியாக இரு கைகளை விட்டபடி தொடர்ந்து 24 மணிநேரம் சைக்கிளை ஓட்டினர்..
ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, 24 மணி நேரம் தொடர்ந்து கைகளை பயன்படுத்தாமல் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தனர்.
இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், பலர் நேரில் வந்து அவர்களை பாராட்டியும் உற்சாகப்படுத்தியும் சென்றனர்.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்களை ஈர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைந்தது.
இந்த துணிச்சலான முயற்சி, சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியை வலுப்படுத்தும் இந்த நிகழ்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றுள்ளது.