கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவமனையில், அரிய மற்றும் சிக்கலான ஜீரண மண்டல மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சை குறைந்த காயச்சிகிச்சை (கீஹோல்) முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை குடலியல் துறை மருத்துவர்களான டாக்டர் மகேந்திரன் மற்றும் டாக்டர் சச்சின் கார்த்திக் தலைமையிலான குழு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
தவறுதலாக கழிப்பறை சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயன திரவத்தை அருந்தியதால் உணவுக்குழாய் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு, பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி புதிய உணவுக்குழாய் பாதை உருவாக்கும் உயர்நிலை மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.முழுவதும் நவீன சிகிச்சை முறையை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது..
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய குடலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திரன்,
பொதுவாக திறந்த அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை, மிகச் சிறிய துளை வழி குறைந்த காயச்சிகிச்சை முறையில் வெற்றிகரமாக செய்துள்ளதாக தெரிவித்தார்..
குறிப்பாக அறுவை சிகிச்சை செய்த எந்த வித அடையாளங்களும் இல்லாமல் இந்த சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளதாக அவர் கூறினார்..
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல்துறை மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற நோயாளி, தற்போது நலமுடன் உணவு உட்கொள்ளும் நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த சாதனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் மேம்பட்ட குறைந்த காயச்சிகிச்சை திறனை வெளிப்படுத்துவதுடன், கடுமையான உணவுக்குழாய் சுருக்கம் பாதிப்பால் அவதிப்படும் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.