அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளை சார்பில், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மாவட்ட செயலாளர் ஆ. சண்முகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் செ. ஜெயராமன் தலைமை வகித்தார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமானூர் காவல்துறை ஆய்வாளர் வனிதா, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், அதனைத் தவிர்ப்பதன் அவசியம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் அரியலூர் நல்லப்பன், நியமன துணைத் தலைவர் செல்வராஜ், இணைச் செயலாளர் அசோக்குமார், துணை புறவளர் காமராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, மாவட்ட கன்வீனர் சிவசங்கர் மற்றும் ஆயுள் உறுப்பினர் சடையப்பன் ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர்.
கருத்தரங்கின் நிறைவில் மாணவ, மாணவியர் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முருகானந்தம், அமலன் அந்துவான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் திருமதி மாலா கிறிஸ்டி ரோஸ்லின் நன்றி கூறினார்.