தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 16, 17, 18, 49 மற்றும் 50-வது வார்டுகளுக்கு உட்பட்ட பி.என்.டி. காலனி, கதிர்வேல் நகர், சிவஜோதி நகர், வேலவன் நகர், அசோக் நகர், ராஜீ நகர், பாரதி நகர், புஷ்பா நகர், நிகிலேசன் நகர், கோக்கூர், பால்பாண்டி நகர், ஜெல்சீனி காலனி, அமுதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மேயர் ஜெகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன், “பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் பொதுமக்கள் அவசரப்பட்டு வீட்டு இணைப்புகளை வழங்க வேண்டாம். இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும். அதன் பிறகு இணைப்புகளை வழங்கினால் பணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறும். தற்போது இணைப்புகள் வழங்கப்படுவதால் பணிகளில் இடையூறு ஏற்படுகிறது” என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ரூ.20 லட்சத்தில் நவீன பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம்: தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை விரைவாக சரிசெய்யும் நோக்கில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் புதிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனத்தில் 120 மீட்டர் நீளமுள்ள குழாய் மற்றும் நவீன கம்பிரசர் வசதி பொருத்தப்பட்டுள்ளதால், பெரிய அளவிலான பாதாள சாக்கடை அடைப்புகளையும் விரைவாக நீக்க முடியும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை திமுக நிர்வாகி பிரபாகர், ஜேஸ்பார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.