திருமண மண்டபங்களில் தற்காலிக ஜவுளிக் கடை அமைத்து விற்பனை செய்வதை தடை கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொள்ளாச்சி ஜவுளி வியாபாரிகள் மனு
திருமண மண்டபங்களில் தற்காலிக ஜவுளிக் கடைகள் அமைக்கப்படுவதால் நிரந்தர ஜவுளி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார ஜவுளி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு திருமண மண்டபங்களில் தற்காலிக ஜவுளிக் கடைகள் அமைத்து விற்பனை நடத்தப்படுவது நிரந்தர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்..
மேலும், நிரந்தர கடை வியாபாரிகள் வாடகை, மின்சார கட்டணம், ஊழியர் சம்பளம், ஜிஎஸ்டி, வருமானவரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு அரசு வரிகளை முறையாக செலுத்தி வருவதாகவும், அதே நேரத்தில் தற்காலிக கடைகள் உரிய அனுமதி மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதால் நிரந்தர வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, திருமண மண்டபங்களில் தற்காலிக ஜவுளிக் கடைகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், விதிமுறைகளை மீறி செயல்படும் தற்காலிக கடைகள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிரந்தர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொள்ளாச்சி ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தெரிவித்தனர்…