தேனி: தேனி அருகே வீரபாண்டியில் செயல்பட்டு வரும் சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் கல்லூரியில், மாணவ–மாணவிகளுக்கான சுயபாதுகாப்பு (Self Defence) கராத்தே பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பட்டறை உடற்கல்வித் துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.எல். ஜவஹர்லால் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், செயலாளர் ஜெ.ஜெ. கலைவாணி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டத்தின் மூத்த கராத்தே பயிற்சியாளரும், 9th Dan Black Belt பெற்றவருமான பி. நாகராஜன் கலந்து கொண்டு, மாணவ–மாணவிகளுக்கு கராத்தே சுயபாதுகாப்பு நுட்பங்கள் குறித்த செய்முறை பயிற்சி அளித்தார். மேலும், அவசர சூழல்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது மற்றும் உடல்–மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கராத்தே பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இப்பட்டறையில் கல்லூரியின் அனைத்து துறைகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கராத்தே பயிற்சியின் அவசியம் மற்றும் சுயபாதுகாப்பு திறன்கள் குறித்து பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர் பி. ராஜதுரை சிறப்பாக செய்திருந்தார்.
இந்த சுயபாதுகாப்பு பயிற்சி பட்டறை மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.