எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பட்டினத்தார் துறவு புண்ட பின் தனது செல்வங்கள் அனைத்தையும் மக்களுக்கு தானமாக வழங்கி விடுமாறு அமைச்சர் சேர்த்தனாரை பணித்தார். அவ்வாறே சேத்தனாரும் அனைத்து பொருட்களையும் பொதுமக்களுக்கு வாரி வழங்கி விட்டார்.
ஆனால் பூம்புகாரை ஆண்ட மன்னன் தானமாக வழங்கிய பொருட்களுக்கு கணக்கு கேட்டான். சேர்த்தனார் தம்மிடம் கணக்கில்லை என்று கூற சினம் கொண்ட அரசன் சேத்தனாரை கையில் விலங்கு பூட்டி சிறையில் அடைத்தான். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சேத்தனாரை காப்பாற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரரை வேண்டினர். அதன்படி சுவேதாரண்யேஸ்வரர் விநாயகரை அனுப்பி சேர்த்தனாரை மீட்க கூறினார். விநாயகரும் அவ்வாறு சிறையில் இருந்த சேர்த்தனாரின் கை விலங்கை தறித்து அவரை விடுதலை செய்தார்.
அவ்விநாயகரே திருவெண்காட்டில் விலங்கு தறித்த விநாயகராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்தது கோயிலில் புனரமைக்கப்பட்டு கடந்த ஏழாம் தேதி அன்று நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.இன்று நான்காவது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கே வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.