கோவை, ஜூலை 11:
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு பெற்ற ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் திலீப்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆய்வக உதவியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நிர்வாக மற்றும் பணியாளர் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஆய்வக உதவியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி இறக்க நடவடிக்கைகளை கைவிட வேண்டும், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 5 முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஆய்வக உதவியாளர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, தேவையான அரசாணைகளை விரைந்து வெளியிட வேண்டும் என மாநில அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகசுந்தரம், கோவை ஆனந்தி, மாவட்டத் தலைவர் ராமானந்தம், மாவட்டச் செயலாளர் கனகராஜ், சூரி உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.