மதுரை, ஜூலை 14: மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டூவீலர் விற்பனை ஷோரூமில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நடத்தி வரும் இந்த டூவீலர் ஷோரூமில் நேற்று இரவு பணிகள் முடிந்த பின்னர் ஊழியர்கள் ஷோரூமை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஷோரூமில் இருந்த ஒரு எலக்ட்ரிக் டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி ஷோரூமின் ஒரு பகுதியைச் சூழ்ந்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அனுப்பானடி, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஷோரூமில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் தீயில் சிக்காமல் தப்பின. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்திற்கான காரணம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.