இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.
இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கௌரவ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமுக்கம் மைதானத்தில் துவங்கிய பேரணி கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று மீண்டும் தமுக்கம் மைதானத்தை வந்தடைந்தது.
இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம், சுய கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு என்ற விழிப்புணர்வு வாசகத்தை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர், கமிஷனர் ஆகியோர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) சித்தார்த்போகர்னா, மாநகராட்சி துணை கமிஷனர் ஜெயினு லாப்தீன், ராஜாராம், முதன்மை கல்வி அதிகாரி தயாளன், மாநகராட்சி கல்வி அதிகாரி மோகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.