சோமண்டார்குடி பகுதியில் கிராம பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. சுற்று வட்டாரத்திலும் பல்வேறு கிராமங்கள் உள்ளது. பொதுமக்கள் பல்வேறு உபயோகங்களுக்கு கள்ளக்குறிச்சிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இப்பகுதி மக்கள் குறுகிய வழியாக கோமுகி ஆற்றை கடந்து காரனுார் பஸ் நிறுத்தம் வழியாக செல்கின்றனர்.
கிராம மக்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்தும் ஆற்றை கடக்கின்றனர். கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றை கடக்கும் போது கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் விளை பொருட்களை வாகனங்களில் அவ்வழியாக ஏற்றிச் செல்கின்றனர்.
பருவ மழையில் கோமுகி அணையில் தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பறித்து செல்லும். அத்தருணத்தில் சோமண்டார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் மே.வன்னஞ்சூர், ரோடுமாந்துார் சாலை வழியாக நீண்ட துாரம் சுற்றி செல்கின்றனர்.
இதற்கிடையே ஆற்றில் குறைவாக தண்ணீர் செல்லும் போது, நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்பட்டு தண்ணீரில் ஆற்றை கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தினை உணராமல் கடும் சிரமங்களுக்கு இடையே சிலர் ஆற்றை கடக்கின்றனர். அத்தருணத்தில், அங்குள்ள கற்கலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லும் அபாயமும் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஆற்றின் அருகே சடையம்பட்டு கிராம எல்லை பகுதியில் கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கின்றனர். கல்லுாரிக்கு காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. போதிய பஸ் வசதியின்மையால் பெரும்பாலான மாணவர்கள் நடந்தே சென்று வருகின்றனர்.
ஆற்றில் நீர் வரத்து இல்லாதபோது சங்கராபுரம் மார்கத்திலிருந்து வரும் கல்லுாரி மாணவர்கள் பெரும்பாலும் ரோடுமாமந்துார் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மோகூர், மோ.வன்னஞ்சூர், சோமண்டார்குடி கிராமம் வழியாக ஆற்றை கடந்து மற்றொரு திசையில் உள்ள கல்லுாரிக்கு செல்கின்றனர்.
மழை காலங்களில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும் போது கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து கச்சிராயபாளையம் செல்லக்கூடிய பஸ்களில் ஏறி காரனுாரில் இறங்கி நீண்ட துாரம் கல்லுாரிக்கு நடந்து செல்கின்றனர். சுமார் 6 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனிடையே ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பட்சத்தில் தனியார் மினி பஸ்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களின் போக்குவரத்தும் கல்லுாரி வழியாக அதிகரிக்க கூடும். கல்லுாரி மாணவர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
எனவே, கிராம பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சோமண்டார்குடி – சடையம்பட்டு இடையே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.