சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி செல்வி, வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன், முன்னாள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் முருகானந்தம், மோனிஷா, மாரிச்செல்வம், ஜவகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வ.உ.சி. கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில்:
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா கோவில்பட்டியில், அவருடைய கொள்ளுப்பேத்தி செல்வியின் இல்லத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அனுசரிக்க வேண்டும். இது அவருடைய குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கையாகும்.
மேலும், அவருடைய பிறந்த இல்லம் அமைந்துள்ள ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி.க்கு மிகப் பிரம்மாண்டமான மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசும் நபர்கள் மீது, அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, அனைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரர்கள் சார்பாக தமிழக முதல்வரிடம் எங்களுடைய கோரிக்கையை வைக்கிறோம் என்றார்.